லண்டனில் உள்ள முக்கிய ரயில் நிலையத்தில் புறப்படத் தயாரான ரயிலின் தானியங்கி கதவுகள் திடீரென மூடியதில், பயணியின் கை கதவின் நடுவே சிக்கிக்கொண்டதால் அவர் நடைமேடையில் பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலையத்திலிருந்து ரயில் மெதுவாக நகரத் தொடங்கியபோது, கதவில் கை சிக்கிய நிலையில் அந்த பயணி ரயிலுடன் ஓட முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்டார். இக் கொடூரக் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ரயில் ஓட்டுநர் உடனடியாகக் கண்ணாடியின் வழியே நிலையைக் கவனித்து அவசரகாலத் தடையை (Emergency Brake) இயக்கியதால், ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த பயணி பலத்த காயங்களின்றி உயிர்தப்பியதாகப் போக்குவரத்துப் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தானியங்கி கதவுகளில் சென்சார் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த ‘ட்ராப் அண்ட் டிராக்’ (Trap and Drag) விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ரயில்வே விபத்து புலனாய்வுப் பிரிவு (RAIB), பயணிகள் ரயில் கதவுகள் மூடத் தொடங்கும்போது உள்ளே நுழையவோ அல்லது கதவுகளைப் பிடிக்கவோ வேண்டாம் என எச்சரித்துள்ளது.