Posted in

3 லட்ச படைவீரர்களுடன் இறுதித் தாக்குதல்: பிரித்தானியாவுக்கு நேரடி மிரட்டல் விடுத்து ரஷ்ய அதிபர் புடின் திட்டம்.

உக்ரைனுக்கு எதிரான போரில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, தலைநகர் கீவ் (Kyiv) பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சுமார் 3,000,00 (3 லட்சம்) கூடுதல் ராணுவ வீரர்களைக் களமிறக்கிப் பிரம்மாண்டத் தாக்குதல் (‘Hammer Blow’) நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டமிட்டு வருவதாகச் சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதேவேளையில், உக்ரைனுக்குத் தொலைதூர ஏவுகணைத் தொழில்நுட்பங்களை வழங்கி உதவி வரும் பிரித்தானியாவுக்கு நேரடி ராணுவ அச்சுறுத்தலையும் ரஷ்யா விடுத்துள்ளது.

பிரித்தானியா தயாரித்த ‘ஸ்டார்ம் ஷாடோ’ (Storm Shadow) ஏவுகணைகளை உக்ரைனிலேயே உற்பத்தி செய்யக்கூடிய வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அந்நாடு பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து, கிரெம்ளின் மாளிகை கடும் கோபமடைந்துள்ளது. உக்ரைனிலும் சரி, பிரித்தானிய எல்லையிலும் சரி உள்ள பிரித்தானிய ராணுவ தளங்கள் மற்றும் ஆயுதத் தொழிற்சாலைகள் ரஷ்யாவின் தாக்குதல் இலக்குகளாக மாறக்கூடும் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா (Maria Zakharova) பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், ரஷ்யா தனது பலவீனமடைந்த போர் முன்னணி படைகளைப் பலப்படுத்தவும், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னதாக உக்ரைனின் வடக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறவும் ரகசியமாக ஆள்சேர்ப்பு மற்றும் ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 3 லட்சத்திற்கும் அதிகமான கூடுதல் படைகளைக் கொண்டு நடத்தப்படும் இந்தத் திடீர் தரைவழித் தாக்குதல், உக்ரைனுக்கு மாபெரும் அழுத்தத்தைக் கொடுக்கும் என ராணுவப் பகுப்பாய்வாளர் மார்க் கலியோட்டி (Mark Galeotti) தெரிவித்துள்ளார்.

மேலும் நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளின் போக்குவரத்து மையங்கள், இரயில்வே பாதைகள் மற்றும் விமான நிலையங்கள் மீது மறைமுகச் சீர்குலைவு (Sabotage) நடவடிக்கைகளை ரஷ்யா தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். ஐரோப்பிய பிராந்தியத்தில் ஜிபிஎஸ் (GPS) செயற்கைக்கோள் தொடர்புகளை முடக்கும் மின்சாரப் போர்முறைகளை ரஷ்யா கையில் எடுத்தால், அது ஐரோப்பாவில் உடனடிப் குழப்பங்களை உருவாக்கும் என்பதால், பிரித்தானியா உள்ளிட்ட மேலைநாடுகள் தங்களின் பாதுகாப்புப் படைகளை உஷார் நிலையில் வைத்துள்ளன.