Posted in

புடின் ரகசிய உறவை அம்பலப்படுத்திய ரஷ்ய பத்திரிகையாளர் மரணம்: லாட்வியாவில் மர்மம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும், ஒலிம்பிக் தங்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவுக்கும் இடையே இருந்த ரகசிய காதல் உறவை முதன்முதலில் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய மூத்த ரஷ்ய பத்திரிகையாளர் கிரிகோரி நெகோரோஷேவ் (Grigory Nekhoroshev) லாட்வியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 69. கடந்த 11 ஆண்டுகளாக ரஷ்யாவில் இருந்து தப்பி ஓடி, லாட்வியா தலைநகர் ரிகாவில் அரசியல் அகதியாக வாழ்ந்து வந்த நிலையில், இந்த திடீர் மரணம் நிகழ்ந்துள்ளது.

தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் பறித்த காளான்களை சமைத்து சாப்பிட்டதால் ஏற்பட்ட நச்சுத்தன்மை (Mushroom Poisoning) காரணமாகவே அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரிகோரி காளான்களைப் பற்றி நன்கு அறிந்த நிபுணராக இருந்தபோதிலும், அவர் பறித்த காளான்கள் உயிராபத்தை விளைவிக்கும் நச்சுக் காளான்களாக மாறியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், லாட்வியா நாட்டு அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கிரிகோரி நெகோரோஷேவ் ‘மொஸ்கோவ்ஸ்கி கொரஸ்பாண்டெண்ட்’ (Moskovsky Korrespondent) என்ற ரஷ்ய செய்தித்தாளின் தலைமை ஆசிரியராக இருந்தபோது, புடின் தனது அப்போதைய மனைவி ல்யுத்மிலாவை விவாகரத்து செய்துவிட்டு, தன்னைவிட முப்பது வயது இளையவரான அலினா கபேவாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிரடி புலனாய்வுச் செய்தியை வெளியிட்டார். இந்த செய்தி கிரெம்ளினைக் உலுக்கியதுடன், புடினின் கடுமையான கோபத்திற்கும் ஆளாக்கியது. இதனால் அதிபர் புடினின் ‘தனிப்பட்ட எதிரி’ (Personal Enemy) என்று கிரிகோரி தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டார்.

இந்த விவகாரத்தை அடுத்து அந்தப் பத்திரிகை நிறுவனம் ரஷ்ய உளவுத்துறையின் கடுமையான அச்சுறுத்தலால் உடனடியாக மூடப்பட்டது. கிரிகோரி உளவுத்துறையினரால் கொடூரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதால், தனது உயிருக்கு பயந்து ரஷ்யாவை விட்டு வெளியேறி லாட்வியாவில் தஞ்சம் புகுந்தார். கிரிகோரி ரிகாவில் வாழ்ந்த ஆண்டுகளில் புடினின் கூலிப்படையினரால் தான் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த காளான் நச்சு மரணத்தின் பின்னணியில் ஏதேனும் சதி இருக்குமோ என்ற சந்தேகம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.