Posted in

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் 2,640 டாஸ்மாக் பார்கள் உடனடியாக மூடல்

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்த சுமார் 2,640 பார்களை (Bars) உடனடியாக மூடுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு கால பார்களுக்கான உரிமம் (License) கடந்த ஜூன் 30 ஆம் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த உரிமக் காலம் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மேலும் கால நீட்டிப்பு வழங்கப்படாமல் அனைத்து பார்களையும் இன்று மாலை 5 மணிக்குள் மூடுமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்துப் பேசியுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் கே. விக்னேஷ், “உரிமக் காலம் முடிவடைந்ததால் பார்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அரசு தரப்பில் புதிய டெண்டர்கள் (Fresh Tenders) கோரப்பட்டு, அவை முழுமையாக இறுதி செய்யப்பட்ட பின்னரே தகுதியான பார்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்” என்று தெளிவுபடுத்தியுள்ளார். பார்கள் மூடப்படுவதால் மதுப்பிரியர்கள் சாலைகள், பூங்காக்கள் அல்லது பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்க காவல்துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடும் என்றும், விதிகளை மீறுவோர் மீது மிகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

பார்கள் மூடப்பட்டுள்ள இதே வேளையில், தமிழகம் முழுவதும் உள்ள பல நூறு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் பூட்டு போடப்பட்டு வருவது குடிப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்றவுடன், தங்களின் தேர்தல் வாக்குறுதியான ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ (Drug-free Tamil Nadu) என்ற இலக்கை நோக்கி முதல் கட்டமாகப் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் கடைகளை அதிரடியாக மூட உத்தரவிட்டது. இந்த அதிரடி நடவடிக்கை தற்பொழுது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்குப் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை அகற்றுவதில் தவெக அரசு மிகத் தீவிரமாக உள்ள நிலையில், தற்போது மேலும் பல கடைகளைக் கண்டறிந்து மூடுவதற்கான இரண்டாவது புதிய பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் மதுவிலக்குத் துறை தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் வரும் நாட்களிலும் கணிசமான எண்ணிக்கையிலான மதுக்கடைகள் மூடப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால் தமிழக அரசியல் மற்றும் சமூகக் களத்தில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *