அமெரிக்காவின் வசம் போதிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கையிருப்பில் உள்ளபோதிலும், குறிப்பிட்ட சில அதிநவீன வகை ஆயுதங்களின் இருப்பு “சற்று குறைவாகவே” (a little bit tighter) உள்ளது என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஈரானுடன் தொடரும் ராணுவ மோதல்கள் காரணமாக அமெரிக்க ராணுவத்தின் ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான இருப்பு அபாயகரமான அளவிற்குச் சரிந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. குறிப்பாக ‘தாட்’ (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளின் இருப்பு 80 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டின. இது குறித்து வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், நாட்டின் ஒட்டுமொத்த ஆயுதக் கிடங்கு வலுவாக உள்ளபோதிலும் சில குறிப்பிட்ட ரகங்களில் பற்றாக்குறை நிலவுவதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார்.
அதேவேளையில், அமெரிக்காவிடம் மிகப்பெரிய அளவிலான வெடிமருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும், சில சக்திவாய்ந்த ஆயுதங்கள் வரம்பற்ற அளவில் (virtually unlimited supply) நம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்க ராணுவம் தன்னிடம் உள்ள ஆயுதங்களை முழுமையாக இழந்துவிட்டது போன்று ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை “தேசியத் துரோக அறிக்கை” எனச் சாடிய ட்ரம்ப், ராணுவ ரகசியங்களை ஊடகங்களுக்குக் கசியவிடும் அதிகாரிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், முந்தைய பைடன் நிர்வாகம் உக்ரைன் போருக்காகப் பெருமளவிலான அமெரிக்க ஆயுதங்களை வாரி வழங்கியதே இந்த பற்றாக்குறைக்கு முதன்மையான காரணம் என்று குற்றம் சாட்டிய ட்ரம்ப், தற்போது அமெரிக்கப் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் புதிய தொழிற்சாலைகளை நிறுவி, இரவு பகலாக ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்தி வருவதாகவும் தெளிவுபடுத்தினார்.