தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தனது 100 நாட்கள் ஆட்சிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் பிரம்மாண்டமான “100 நாள் சாதனை மலர்” புத்தகத்தை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். சென்னை நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் ‘ஒரு புதிய தொடக்கம்’ என்ற தலைப்பிலான இந்த வரலாற்றுச் சாதனை காலப்பேழைப் புத்தகமும் வெளியிடப்பட்டது.
ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த முதலமைச்சர் விஜய், இந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் திட்டங்களின் தொகுப்பாக இந்த மலர் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கான சிங்கப்பெண் அதிரடிப்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான 65 தனிப்படைகள் அமைக்கப்பட்ட விபரம் இதில் விரிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி, கல்வி மற்றும் மருத்துவத்துறையில் கொண்டு வரப்பட்ட கட்டமைப்பு மேம்பாடுகள், மற்றும் 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரையிலான தவெக அரசின் முக்கிய மைல்கல் முடிவுகள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிருவாகத்தை மக்களுக்கு வழங்குவதே தங்களது இலக்கு என்பதை இந்த சாதனைப் புத்தகம் பறைசாற்றுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 100 நாட்களில் மக்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய், வரும் நாட்களிலும் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இப்புத்தகம் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொதுமக்களின் பார்வைக்கும் கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.