அமெரிக்காவை உலுக்கிய செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவையொட்டி, அன்றைய நாள் சம்பவங்களை நிமிடங்கள் வாரியாக ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளத்தில் நேரலையாகப் பதிவிட்டு வரலாற்று ஆய்வாளர் ஒருவர் விவரித்து வருவது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
6 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பாளர்களைக் கொண்ட எக்ஸ் பயனர் மேனி மரோட்டா (Manny Marotta) என்பவரே இந்த வினோதமான முயற்சிக்குச் சொந்தக்காரர் ஆவார். 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று காலை 8:46 மணி முதல் 10:30 மணி வரை நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல் மற்றும் பென்டகன் தாக்குதல்கள் எப்படி அரங்கேறின என்பதை, 25 ஆண்டுகளுக்குப் பின் இன்று அதே நேரக்கணிப்பில் ’25YearsAgoLive’ என்ற கணக்கின் மூலம் நிமிடத்திற்கு இரு பதிவுகள் வீதம் அவர் நேரடியாகப் பதிவிட்டு வருகிறார்.
இந்த வரலாற்று மறுபதிவிற்காக 240 மணி நேரத்திற்கும் மேலான நேரலை வீடியோ காட்சிகள், ஊடக அறிக்கைகள் மற்றும் கள ஆய்வறிக்கைகளை ஆராய்ந்து துல்லியமான நேரக்கணிப்பை அவர் உருவாக்கியுள்ளார். இளைய தலைமுறையினருக்கு அன்றைய அதிர்ச்சியையும் நிகழ்வுகளின் தீவிரத்தையும் உணர்த்துவதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் துயரமான புகைப்படங்களையோ வீடியோக்களையோ பதிவிடவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த எக்ஸ் நேரலை மூலம் எவ்வித பண பலன்களையும் அல்லது விளம்பர வருவாயையும் தான் பெறப்போவதில்லை என்றும், இது தனது வரலாற்று ஆர்வத்தினால் செய்யப்படும் முயற்சி என்றும் மேனி மரோட்டா தெளிவுபடுத்தியுள்ளார். 25 ஆண்டுகள் கழிந்த பின்னரும், 9/11 தாக்குதல் சம்பவத்தை தத்ரூபமாக எக்ஸ் தளத்தில் மீளுருவாக்கம் செய்யும் இவரது முயற்சி இணையவாசிகளிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.