Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

குவைத் நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல் - இந்தியத் தொழிலாளி பரிதாப மரணம்!

குவைத் நாட்டின் மின்சாரம், நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இன்று (மார்ச் 30, 2026) அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானியப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு சேவை மையம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் அங்கிருந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். "குவைத் அரசுக்கு எதிரான ஈரானின் அக்கிரமம்" என்று இதனை வர்ணித்துள்ள குவைத் அதிகாரிகள், தாக்குதலில் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்துள்ளதாகவும், தொழில்நுட்பக் குழுவினர் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தப் மோதலில் உயிரிழக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது எட்டாக (8) உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ஏவுகணைச் சிதறல்கள் தாக்கி இந்தியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது குவைத்திலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது. போர்க்களமாக மாறியுள்ள வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாகக் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபரின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும், அவரது உடலை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும் குவைத் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தூதரகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. இருப்பினும், புது தில்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) இதுவரை இந்தச் சம்பவம் குறித்து விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவினர் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு நிலை குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் 5-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், குவைத் மீது மட்டும் இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வீசப்பட்டுள்ளதாகக் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் போன்ற பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை முடக்கும் வகையில் ஈரான் இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அப்பாவித் தொழிலாளர்களின் உயிரிழப்புகள் உலக நாடுகளிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளன.

Share this news: Back to Home