ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகப் பாதையான ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள பிரிட்டிஷ் ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சர் பேட்ரிக் சாண்டர்ஸ் (General Sir Patrick Sanders), நாம் ஏற்கனவே 'மூன்றாம் உலகப் போரின்' (WW3) வாசலில் நிற்பதாக எச்சரித்துள்ளார். "ஹார்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா தரைப்படை ஆக்கிரமிப்பைத் தொடங்கினால், அது ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறாகவும், கற்பனை செய்ய முடியாத உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தும் பேரழிவாகவும் முடியும்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer), ஈரானைத் தாக்க அமெரிக்காவிற்குத் தனது நாட்டு ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ள நிலையில், பிரிட்டனுக்குள்ளேயே இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஈரான் தரப்போ, அமெரிக்கா தனது மண்ணில் கால் வைத்தால் சுமார் 10 லட்சம் வீரர்களைத் திரட்டி 'தற்கொலைப்படை' தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை (Kharg Island) அமெரிக்கா கைப்பற்ற முயன்றால், அங்குள்ள ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) மூலம் ஈரானின் பல பகுதிகள் சிதைக்கப்பட்டாலும், ஹார்முஸ் நீரிணையை மூடி உலகப் பொருளாதாரத்தை முடக்கும் வலிமை ஈரானிடம் இன்னும் இருப்பதாகவே உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஹார்முஸ் நீரிணையில் 150-க்கும் மேற்பட்ட எண்ணெய் டாங்கர் கப்பல்கள் தேங்கிக் கிடப்பதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
