ஈரான் புரட்சிகரக் காவல்படையின் (IRGC) செய்தித் தொடர்பாளரான ஜெனரல் அலி முகமது நைனி (General Ali Mohammad Naeini), மார்ச் 20, 2026 அன்று காலை ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், "இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு மிகப்பெரிய 'சர்ப்ரைஸ்' (Surprise) காத்திருக்கிறது; ஈரான் இன்னும் தனது ஏவுகணை வலிமையைத் தக்கவைத்துள்ளது, விரைவில் அதன் பலத்தை உலகம் பார்க்கும்" என்று திமிராக மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால், இந்த மிரட்டல் விடுத்த அடுத்த 4 மணி நேரத்திற்குள்ளேயே, டெஹ்ரானில் உள்ள அவரது இருப்பிடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய துல்லியமான வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ஆற்றிய உரையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு 90 சதவீதம் சிதைக்கப்பட்டுவிட்டதாகக் கூறியிருந்தார். இதனை மறுத்துப் பேசியிருந்த நைனி, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு வளையங்களைத் தகர்க்கும் திறன் ஈரானிடம் இப்போதும் இருப்பதாகச் சவால் விட்டார். நைனியின் இந்தச் சவால் வெளியான சில நிமிடங்களிலேயே, இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' (Mossad) அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்து ராணுவத்திற்குத் தகவல் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏவப்பட்ட ஏவுகணை, நைனி தங்கியிருந்த கட்டிடத்தை நேரடியாகத் தாக்கி அவரை அங்கேயே வீழ்த்தியுள்ளது.
ஈரான் போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல், ஈரானின் உயர்மட்டத் தலைவர்களை இஸ்ரேல் வரிசையாகக் குறிவைத்துத் தூக்கி வருகிறது. ஏற்கனவே ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் அலி லாரிஜானி ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது நைனியும் கொல்லப்பட்டுள்ளது ஈரானின் செய்தித் தொடர்பு மற்றும் திட்டமிடல் பிரிவுக்குப் பலத்த அடியாகும். "ஈரானில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, அனைவரும் எங்கள் இலக்கு தான்" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் விடுத்த எச்சரிக்கை, இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனியின் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தங்களது தளபதிகள் வரிசையாகக் கொல்லப்படுவது ஈரானிய ராணுவத்தினரிடையே ஒருவித அச்சத்தையும், நம்பிக்கையற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது. மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் தலைமைத்துவம் முற்றிலும் சிதைந்துவிட்டதாகவும், பேசுவதற்கு அங்கே ஆளே இல்லை என்றும் கேலி செய்துள்ளார். நைனியின் மரணம் ஈரானின் 'சர்ப்ரைஸ்' திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
