அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த விதிக்கப்பட்ட காலக்கெடுவை ஏப்ரல் 6 வரை நீட்டித்துள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் ஓயவில்லை.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பேசிய ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்கப் படைகளின் வருகைக்காகத் தங்களது வீரர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். "அமெரிக்க வீரர்கள் தரையிறங்கும் நிமிடங்களை நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம்; அவர்களை அங்கேயே அழித்துச் சாம்பலாக்குவோம்" என்று அவர் சவால் விடுத்துள்ளார். அமெரிக்கா பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், உண்மையில் தரைப்படைத் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளைத் தான் அமெரிக்கா செய்து வருவதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. சுமார் 2,500 அமெரிக்க கடற்படை வீரர்கள் (Marines) ஏற்கனவே பிராந்தியத்திற்கு வந்து சேர்ந்துள்ளது ஈரானின் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
மறுபுறம், அமெரிக்கா தனது பிடியைத் தளர்த்தப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், இந்தப் போர் பல மாதங்களுக்கு நீடிக்காது என்றும், சில வாரங்களிலேயே முடிவுக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் ஈரானின் எரிசக்தி மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளை 90 சதவீதம் சிதைத்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அடுத்தகட்டமாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள 'கார்க் தீவை' (Kharg Island) அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போரில் இதுவரை 140-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்கள் மற்றும் 9,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
