மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவரது கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவரது தந்தை அலி கமேனி கொல்லப்பட்டபோது, மொஜ்தபாவும் படுகாயமடைந்து கோமா நிலைக்குச் சென்றதாகக் கூறப்பட்டது. குறிப்பாக, ஈரானிய ஊடகங்கள் அவரை 'ஜன்பாஸ்' (Janbaaz - ஊனமுற்ற போர் வீரன்) என்று குறிப்பிட்டது, அவரது உடல் உறுப்புகள் ஏதேனும் அகற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது.
இந்தச் சூழலில், மொஜ்தபா கமேனி உயிருக்கு அஞ்சி ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும், மாஸ்கோவில் உள்ள ஒரு ரகசிய மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் புதிய வதந்திகள் கிளம்பின. குவைத் ஊடகம் ஒன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரடியாகத் தலையிட்டு மொஜ்தபாவை ராணுவ விமானம் மூலம் மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்றதாக செய்தி வெளியிட்டது. இருப்பினும், கிரெம்ளின் மாளிகை இந்தச் செய்திகளை உறுதிப்படுத்த மறுத்துவிட்டதுடன், மொஜ்தபா ஈரானிலேயே பாதுகாப்பான ஒரு நிலத்தடி பதுங்கு குழியில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மொஜ்தபா கமேனி பெயரில் மார்ச் 16 அன்று ஒரு புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தான் நலமாக இருப்பதாகவும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் தனது பதிலடியைத் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இருப்பினும், அவர் இதுவரை கேமரா முன்னால் தோன்றி நேரடி வீடியோ எதையும் வெளியிடவில்லை. அவர் வெளியிடும் அறிக்கைகள் அனைத்தும் எழுத்து வடிவிலோ அல்லது மற்றவர்கள் வாசிப்பதாகவோ இருப்பதால், அவர் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், மொஜ்தபா கமேனி குறித்த சர்ச்சைக்குரிய உளவுத்துறைத் தகவல்களையும் அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அவர் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதைப் பயன்படுத்தி, அவரது ஆளுமையைக் குறைத்து மதிப்பிடும் முயற்சிகளும் ஒருபுறம் நடக்கின்றன. ஆனால், ஈரானிய அரசு தரப்பு இந்த வதந்திகள் அனைத்தையும் திட்டமிட்ட போலிப் பிரச்சாரம் என்று மறுத்துள்ளது. போர்க்களத்தில் ஈரான் தனது பிடியைத் தளர்த்தவில்லை என்பதைக் காட்டவும், நாட்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் மொஜ்தபா கமேனி தொடர்ந்து ரகசிய இடத்திலிருந்து கட்டளைகளைப் பிறப்பித்து வருவதாகக் கூறப்படுகிறது.
