இந்த விவகாரத்தில் இளவரசியின் முரண்பட்ட தகவல்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. 2011-ஆம் ஆண்டிலேயே எப்ஸ்டின் பற்றி கூகுளில் தேடிப் பார்த்ததாகவும், அது "அவ்வளவு நன்றாகத் தெரியவில்லை" என்றும் அவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஆனால், தற்போது அளித்துள்ள பேட்டியில், அவர் ஒரு பாலியல் குற்றவாளி என்பது தனக்குத் தெரியாது என்றும், அவரது பின்னணியை முறையாக ஆராயாமல் விட்டது தனது தவறு என்றும் அவர் கூறியுள்ளார். "நான் மனிதர்களை எளிதில் நம்பிவிடக்கூடியவள் (Gullible). எப்ஸ்டின் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி என்னைத் தனது வலையில் சிக்க வைத்தார்" என்று அவர் தனது தரப்பு நியாயத்தை விளக்கியுள்ளார்.
இளவரசியின் இந்த நட்பு விவகாரம் நோர்வே மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, நோர்வே அரச குடும்பத்திற்கான ஆதரவு 70 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும், இளவரசியின் மகன் மரியஸ் போர்க் ஹோய்பி (Marius Borg Høiby) தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணையைச் சந்தித்து வரும் நிலையில், இந்த எப்ஸ்டின் விவகாரம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல அமைந்துள்ளது. "மக்களின் நம்பிக்கையைச் சிதைத்ததற்காக நான் மன்னர் ஹரால்ட் மற்றும் ராணி சோனியாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன்" என்று இளவரசி மெட்டே-மாரிட் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள இளவரசி, இந்த விவகாரம் கடந்த 2019 முதல் தனக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்து வருவதாகக் கூறினார். ஒருமுறை எப்ஸ்டினின் இல்லத்தில் இருந்தபோது தான் பாதுகாப்பற்ற உணர்வை அடைந்ததாகவும், உடனே தனது கணவர் இளவரசர் ஹாகோனை அழைத்து உதவி கேட்டதாகவும் அவர் ஒரு அதிர்ச்சித் தகவலையும் பகிர்ந்துள்ளார். நோர்வே நாடாளுமன்றம் தற்போது எப்ஸ்டினுக்கும் நோர்வே அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்துத் தனியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதால், வரும் நாட்களில் இந்த விவகாரத்தில் மேலும் பல முக்கியத் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
