அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள நிலையில், இது ஈரானிய ராணுவத்தின் (IRGC) தீவிரவாதப் போக்கு கொண்ட தளபதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் விதித்துள்ள நிபந்தனைகளுக்குப் பணிந்து ஈரான் அரசு அமைதி ஒப்பந்தம் செய்தால், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தங்களது சொந்த நாட்டு உயர்மட்ட அதிகாரிகளையே படுகொலை செய்யத் தீவிரவாதத் தளபதிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போரை நிறுத்த முற்படும் தலைவர்களை 'துரோகிகள்' எனக் கருதி அவர்களை அப்புறப்படுத்த ராணுவத்திற்குள்ளேயே ஒரு ரகசியக் குழு செயல்பட்டு வருவதாகப் பாதுகாப்பு ஆய்வாளர் மெஹ்தி பர்பாஞ்சி (Mehdi Parpanchi) தெரிவித்துள்ளார்.
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவிற்குப் பிறகு, அந்நாட்டின் அதிகாரம் சிதறிக்கிடக்கும் சூழலில், ராணுவத்தின் ஒரு பிரிவினர் போரைத் தொடர்ந்து நீட்டிக்கவே விரும்புகின்றனர். குறிப்பாக, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Ghalibaf) போன்றவர்கள் அமெரிக்காவுடன் ரகசியத் தொடர்பில் இருப்பதாக எழும் செய்திகள், ராணுவத்தின் கீழ்மட்டத் தளபதிகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த 5 நாள் போர் இடைநிறுத்தம் மற்றும் "ஈரான் ஒப்பந்தம் செய்யத் துடிக்கிறது" என்ற பேச்சுக்கள், ஈரானிய ஆட்சி அதிகாரத்திற்குள் ஒருவருக்கொருவர் இடையில் சந்தேகத்தை விதைப்பதற்கான ஒரு உளவியல் போர் (Psychological Warfare) தந்திரம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஈரானிய ராணுவத்தின் ஒற்றுமையைச் சிதைக்க ட்ரம்ப் முயல்கிறார். ஒருவேளை ஈரான் அரசு அமைதிக்குச் சம்மதித்தால், ராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டு அது ஒரு உள்நாட்டுப் போராக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஈரானின் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் மொஜ்தபா கமேனிக்கே தெரியாமல் சில பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்படுவது இந்தச் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
தற்போதைய சூழலில், ஈரானின் 'நிழல் அரசு' என்று அழைக்கப்படும் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), போரை நிறுத்துவது தங்களது இருப்பிற்கே ஆபத்து எனக் கருதுகிறது. எனவே, அமைதி ஒப்பந்தத்தைத் தடம் புரளச் செய்ய அவர்கள் தங்களது சொந்த நாட்டு அமைச்சர்கள் அல்லது தூதர்களை இலக்கு வைக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. ட்ரம்ப் வழங்கியுள்ள 5 நாள் அவகாசம் முடிவடைவதற்குள், ஈரானுக்குள் ஒரு மிகப்பெரிய அதிகாரப் போர் அல்லது படுகொலைச் சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
