என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இருக்கும் பாஜாக (BJP) சார்பாக தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அதேவேளை, மயிலாப்பூர் தொகுதியில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு (TVK) பலத்த ஆதரவு உள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, இத்தொகுதியில் தவெக சார்பாக யாரை நிறுத்தினாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சொல்லப்போனால், நடிகர் விஜய் அவர்களே மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடக்கூடும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் அரசல்புரசலாகப் பேசப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான், மயிலாப்பூரில் தமிழிசை போட்டியிடப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலிடம் ஏன் இந்த முடிவை எடுத்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையில், பாஜாக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று கூறி ஒதுங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் உண்மை அதுவல்ல; பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று விபரம் தெரிந்தவர்கள் கூறி வருகிறார்கள். எது எப்படியிருந்தாலும், நயினார் நாகேந்திரன் தலைமையிலான தமிழக பாஜக இம்முறை அதிமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. ஏற்கனவே அதிமுக செல்வாக்கு இழந்த நிலையில் உள்ளதால், இது பாஜகவிற்கும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாகத் தேர்தல் முடிந்த பிறகு, பாஜக மேலிடம் தமிழக அலகில் பல அதிரடி மாற்றங்களை நிச்சயம் கொண்டு வரும் எனக் கருதப்படுகிறது.
அதில் ஒன்றாக, மீண்டும் அண்ணாமலையைத் தமிழக பாஜக மாநிலத் தலைவராக முழுநேரமாக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. இதனால்தான் அண்ணாமலை மிகவும் சாதுரியமாகச் சிந்தித்து, இம்முறை போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகிறார்கள். எது எப்படி இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை இம்முறை பாஜக கடந்த தேர்தலை விடக் குறைவான வாக்குகளையே பெறும் என்று பல கருத்துக் கணிப்புகள் ஏற்கனவே கணித்துள்ளன.
