அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் அதன் இலக்கை நெருங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். "ஈரானின் பயங்கரவாத ஆட்சியை முடக்கும் எங்களது ராணுவ முயற்சிகள் வெற்றியை நெருங்கிவிட்டன; எனவே போரை மெதுவாகக் குறைப்பது (Winding down) குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார். ஈரானின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் ஏவுகணைத் தளங்கள் பெருமளவில் சிதைக்கப்பட்டுவிட்டதால், இனி அமெரிக்கா அங்கே தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கருதுகிறார். "நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்" என்று கூறியுள்ள அவர், தற்போது போர் நிறுத்தம் (Ceasefire) செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், எதிரியை முற்றிலும் அழித்த பிறகு போர் தானாகவே முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்துப் பேசிய ட்ரம்ப், "ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெயை அமெரிக்கா பயன்படுத்துவதில்லை; அதனைப் பயன்படுத்தும் நாடுகள் தான் இனி அதன் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும்" என்று கையை விரித்துள்ளார். ஜப்பான், சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களது சொந்தப் போர்க்கப்பல்களை அனுப்பி நீரிணையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அமெரிக்கா இனி மற்ற நாடுகளுக்காக அங்கே 'போலீஸ்' வேலை பார்க்க முடியாது என்றும் அவர் சாடியுள்ளார். "உதவி கேட்டால் செய்வோம், ஆனால் இனி இது உங்கள் பிரச்சனை" (YOUR PROBLEM NOW) என்ற ரீதியில் அவர் விடுத்துள்ள செய்தி நேட்டோ (NATO) மற்றும் ஆசிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 47 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ள நிலையில், அதனைச் சமாளிக்க அமெரிக்கா ஒரு புதிய அதிரடி முடிவை எடுத்துள்ளது. கடலில் ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ஈரானிய கச்சா எண்ணெய் மீதான தடைகளை (Sanctions) அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 140 மில்லியன் பேரல் எண்ணெய் உலகச் சந்தைக்கு வரும் என்றும், இது பெட்ரோல் விலையைக் குறைக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 19 வரை செல்லுபடியாகும் இந்த உத்தரவு, போரினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ட்ரம்ப் எடுத்துள்ள ஒரு தந்திரோபாய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா ஒருபுறம் போரை முடிப்பது பற்றிப் பேசினாலும், மறுபுறம் 'யுஎஸ்எஸ் பட்டான்' போன்ற 3 பிரம்மாண்டப் போர்க்கப்பல்களையும், 2,500 கூடுதல் மெரைன் வீரர்களையும் மத்திய கிழக்கிற்கு அனுப்பி வருகிறது. "ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை எங்களது வேட்டை தொடரும்" என்று பென்டகன் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி தனது புத்தாண்டு செய்தியில் எதிரிகளுக்கு "மயக்கமளிக்கும் அடியை" கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். இருதரப்பும் வெற்றியை உரிமை கோரி வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்புப் பொறுப்பை மற்ற நாடுகள் ஏற்குமா என்பது தான் தற்போதைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
