தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 30-ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கவுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களும் அன்றைய தினமே தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னையில் உள்ள முக்கியத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் விஐபி தொகுதிகளில் களம் காணும் நிர்வாகிகள் மார்ச் 30 அன்று காலை 11 மணியளவில் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும் அதே நாளில், தமிழகம் முழுவதும் தவெக-வின் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவும் அக்கட்சித் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், மார்ச் 30 அன்று பிரசார வாகனங்கள் அணிவகுக்க, விஜய் தனது நேரடிப் பிரசாரத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. "வெற்றி நமதே" என்ற முழக்கத்துடன், தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் பிரசாரப் பணிகளை முடுக்கிவிடுவதன் மூலம் மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலை அளிக்கத் தவெக திட்டமிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகப் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு மற்றும் தேர்தல் அலுவலகங்கள் மூடப்படுவது போன்ற விவகாரங்களால் அரசுக்கும் தவெக-வுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மார்ச் 30 அன்று பிரசாரத்தைத் தொடங்கும் போது இத்தகைய தடைகளைத் தவிர்க்கும் பொருட்டு, உரிய அனுமதிகளை முன்கூட்டியே பெறத் தவெக சட்டக் குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பெரம்பூர் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் சிறிய அளவிலான கூட்டங்கள் மூலம் விஜய் மக்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறார்.
ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 30 முதல் ஏப்ரல் 21 வரை மிகக் குறுகிய காலமே பிரசாரத்திற்கு உள்ளது. இதனால், ஒவ்வொரு நாளையும் பயனுள்ள முறையில் கழிக்கத் தவெக வியூகம் வகுத்துள்ளது. விஜய்யின் இந்த அதிரடி முடிவால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. மார்ச் 30 அன்று தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் பெருந்திரளாகக் கூடவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
