ஈரானைச் சுற்றியுள்ள நாடுகளில் படிக்கும் அமெரிக்க மாணவர்கள் மற்றும் உள்ளூர் மாணவர்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்குமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, "இனி பல்கலைக்கழகங்களைக் குறிவைத்துத் தாக்குவோம்; மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பது நல்லது" என ஈரான் விடுத்த அதிரடி எச்சரிக்கையால் வளைகுடா நாடுகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க மாணவர்கள் பலர் வளைகுடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்று வருகிறார்கள். ஈரானின் இந்த அறிவிப்பால் பல அரபு நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் அபாயம் தோன்றியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்கப் போர் விமானங்கள் ஈரானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தைத் தாக்கித் தரைமட்டமாக்கியதுதான். அந்தப் பழிவாங்கும் நோக்கிலேயே ஈரான் இந்த விபரீத அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அரபு நாடுகள் இப்போது "தலையில் துண்டைப் போடும்" நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
"ஏன் அமெரிக்காவுக்குத் தங்கள் நாட்டுத் தளங்களைப் பயன்படுத்த இடம் கொடுத்தோம்?" என்று பல அரபு நாடுகள் இப்போதுதான் புலம்ப ஆரம்பித்துள்ளன. ஏனெனில், போர்ச் சூழலால் அந்த நாடுகளின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சரிந்து வருகிறது. இதற்கு முதல் உதாரணம் சவுதி அரேபியா. அந்த நாடு தற்போது பத்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சொர்க்கபூமியாகத் திகழ்ந்த துபாய் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது; அங்கிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் ஈ ஓட்டிக்கொண்டிருப்பதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானைக் கடுமையாகத் தாக்கி வரும் நிலையிலும், ஈரான் எங்கிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுகிறது என்பது இன்னும் "சிதம்பர ரகசியமாகவே" உள்ளது. மலைகளைக் குடைந்து ரகசியத் தளங்களை ஈரான் ஏற்கனவே நிறுவியுள்ளது. இந்த இடங்கள் குறித்த எந்தவொரு உளவுத் தகவலும் அமெரிக்காவிடமோ, இஸ்ரேலிடமோ இல்லை. ஈரான் இப்படி ஒரு நாள் வரும் என்று முன்னரே கணித்து அனைத்து ஏற்பாடுகளையும் பக்கா-வாகச் செய்து வைத்துள்ளது. தற்போது ரஷ்யா தனது உளவுத் தகவல்களையும், ஆயுதங்களையும் ஈரானுக்கு ரகசியமாக வழங்கத் திட்டமிட்டு வருவதால், இந்தப் போர் இப்போதைக்கு முடியாது என்றே தோன்றுகிறது. அலி கமேனியை வீழ்த்தினால் ஈரானை வென்றுவிடலாம் என்று அமெரிக்கா போட்ட தப்புக்கணக்கு, இன்று அவர்களுக்கே பெரும் குடைச்சலாக மாறிவிட்டது!
