ஈரானிய கடற்படை காலி: வெடித்துச் சிதறும் கப்பல்கள் வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா!
By kayal | 29 March
அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் (CENTCOM) நேற்று (மார்ச் 28, 2026) தனது எக்ஸ் (X) தளத்தில் ஈரானிய கடற்படைக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களின் நேரடி வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது."பல தசாப்தங்களாக பிராந்தியக் கடற்பரப்பில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாகவும் இடைஞ்சலாகவும் இருந்த ஈரானியக் கடற்படையின் காலம் முடிந்துவிட்டது" என்ற அதிரடி வாசகத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.இதில் அமெரிக்காவின் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் ஈரானின் முக்கியப் போர்க்கப்பல்களைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கக் கடற்படைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் இது குறித்துத் தெரிவிக்கையில், கடந்த நான்கு வாரப் போரில் ஈரானின் மிகப்பெரிய கடற்படைக் கப்பல்களில் 92 சதவீதத்தை அமெரிக்கா அழித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, ஈரானின் மிகப்பெரிய ட்ரோன் தாங்கிக் கப்பலான 'ஷாஹித் பகேரி' (Shahid Bagheri) மீதான தாக்குதல் வீடியோவில் அச்சிடப்பட்டுள்ளது. ஈரானிய கடற்படை தற்போது தனது வலிமையை முற்றிலுமாக இழந்துவிட்டதாகவும், இனி அவர்களால் பிராந்திய அளவில் எந்தவொரு பெரிய கடற்படைத் தாக்குதலையும் முன்னெடுக்க முடியாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறுபுறம், இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகத் துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு 'மறைவிடங்கள்' மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ள அமெரிக்கா, சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 வீரர்கள் மட்டுமே காயமடைந்ததாக உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்தத் தகவல் போர், போர்க்களப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போரில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகளை அமெரிக்கா தாக்கியுள்ளது.ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் உலக எண்ணெய் விநியோகத்தை ஈரான் முடக்கியுள்ள நிலையில், அதனை மீட்க அமெரிக்கா தனது முழுப் பலத்தையும் பிரயோகித்து வருகிறது. ஈரானின் உள்கட்டமைப்புகள் 90 சதவீதம் சிதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஈரான் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து 'சைபர்' மற்றும் 'அசைமெட்ரிக்' (Asymmetric) போர் முறைகளைக் கையில் எடுத்துள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் ஈரான் பணியவில்லை என்றால் தரைப்படைத் தாக்குதல் தொடங்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.