பிரிட்டனின் தென்மேற்கு பகுதியிலுள்ள பிலிமத் (Plymouth) துறைமுக நகரக் கடற்கரையிலிருந்து வெறும் 40 நாட்டிக்கல் மைல் (சுமார் 74 கி.மீ) தொலைவில், ரஷியக் கடற்படையின் சக்திவாய்ந்த போர்க்கப்பல் ஒன்று நேரடி வெடிமருந்துகளைப் பயன்படுத்தி (Live-fire) திடீர் குண்டுவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சர்வதேசக் கடற்பரப்பில் அரங்கேறிய இந்தச் சம்பவம், பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்ற உடனேயே நடைபெற்றுள்ளதால், இது லண்டனை அச்சுறுத்துவதற்காகவே ரஷியாவால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட ‘ஒத்திகை’ எனப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
ரஷியப் பால்டிக் கடற்படைக்குச் சொந்தமான ‘நெயுஸ்ட்ராஷிமி’ (Neustrashimy) என்ற 130 மீட்டர் நீளமுள்ள அந்தப் போர்க்கப்பல், திங்கள்கிழமை காலை திடீரெனத் தான் நேரடித் துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கிப் பயிற்சியை நடத்தவுள்ளதாக அறிவித்தது. மேலும், தங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த பிரிட்டனின் ‘ஹெச்.எம்.எஸ் டைன்’ (HMS Tyne) என்ற ரோந்துப் போர்க்கப்பலிடம், பாதுகாப்பான தொலைவுக்கு நகருமாறு ரஷியப் படையினர் ரேடியோ மூலம் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, பிரிட்டிஷ் போர்க்கப்பல் சற்றே பின்வாங்கிய நிலையில், ரஷியக் கப்பல் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகத் தனது பிரதான பீரங்கிகளால் இடைவிடாது குண்டுகளை வீசிப் பயிற்சியை நடத்தியது.
உலகின் மிக பரபரப்பான கடல் வழியான ஆங்கிலேயக் கால்வாய் (English Channel) அருகே ரஷிய போர்க்கப்பல் இவ்வளவு குறைந்த இடைவெளியில் நேரடிப் பயிற்சியில் ஈடுபட்டது சமீபத்திய வரலாற்றில் மிகவும் அரிதான ஒன்றாகும். இந்தச் சம்பவத்திற்குப் பிரிட்டனின் புதிய பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் (Wes Streeting) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ரஷியாவின் இந்த நடவடிக்கை வெறும் விளம்பரத்திற்கானதும், பொறுப்பற்றத்தனமானதுமாகும்; பிரிட்டனும் அதன் நேச நாடுகளும் சந்தித்து வரும் அன்றாட அச்சுறுத்தலின் ஒரு பகுதியே இது” என்று சாடிய அவர், பிரிட்டன் எல்லைகளைப் பாதுகாக்கத் தங்களது கடற்படை எப்போதும் தயாராக உள்ளது என எச்சரித்தார்.
சமீபத்தில் ரஷியாவின் நிழல் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை பிரிட்டன் கடற்படை கைப்பற்றியதற்கும், கடந்த மாதம் ஆங்கிலேயக் கால்வாயில் சென்ற பிரிட்டிஷ் சொகுசுப் படகு மீது ரஷிய போர்க்கப்பல் எச்சரிக்கைச் சூடு நடத்தியதற்கும் இடையே, தற்போதைய நிகழ்வு பிரிட்டன்-ரஷியா இடையே உச்சகட்ட கடற்படைப் போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. தற்போது அந்த ரஷியப் போர்க்கப்பலை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டு ராணுவ விமானங்கள் தொடர்ந்து வான்வழியாகவும், அரசுக் கடற்படைக் கப்பல்கள் கடல்வழியாகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.