ஸ்காட்லாந்து நாட்டின் (Larkhall) பகுதியில் உள்ள க்ளென் அவென்யூவில் காவல்துறை அதிகாரிகள் மீது வான் வாகனத்தை வேண்டுமென்றே பின்னோக்கி மோதிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் வழக்கமான விசாரணைகளுக்காகச் சென்ற இரண்டு ஸ்காட்லாந்து காவல்துறை அதிகாரிகள் மீது இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாகத் தப்பியோடிய குற்றவாளியைத் தேடும் தீவிர தேடுதல் வேட்டையை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த விவரங்களை அப்பகுதி மக்களும் உள்ளூர்வாசிகளும் விவரிக்கையில், சந்தேக நபர் உடனடியாக வெள்ளை நிற ரெனால்ட் டிராபிக் வான் (Renault Trafic van) வாகனத்தை நோக்கி ஓடியதாகவும், அதனைப் பின் தொடர்ந்து சென்ற காவல்துறை அதிகாரிகளை அவர் கொடூரமான முறையில் வான் வாகனத்தால் மோதியதாகவும் தெரியவந்துள்ளது. ஆறு அடி உயரமும், கருப்பு நிறக் குறுகிய கால்சட்டை, சாம்பல் நிற ஸ்வெட்டர் மற்றும் பீஜ் நிற பேஸ்பால் தொப்பியும் அணிந்திருந்த அந்த நபர், அதிகாரிகளைத் தாக்கிய பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த 43 மற்றும் 41 வயதுடைய இரண்டு காவல்துறை அதிகாரிகளும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 41 வயதுடைய அதிகாரி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ள நிலையில், 43 வயதுடைய அதிகாரி தொடர்ந்து மருத்துவமனையில் பாதுகாப்பான சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தாக்குதலுக்குள்ளான அதிகாரிகளை மீட்க அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக முன்வந்து உதவிகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வான் வாகனம் பின்னர் கிளாஸ்ஃபோர்டு பகுதியில் உள்ள கியிர்க்சில் பிளேஸ் (Kirkstyle Place) பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துப்பறியும் ஆய்வாளர் கேரி ஸ்மிலி, கடமையிலிருந்த அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது என்றும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி மற்றும் டூ காம் கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
காவல்துறையினர் மீது நடத்தப்படும் வன்முறைகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மூத்த அதிகாரிகளான தலைமை ஆய்வாளர் பால் டோய்ல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குற்றவாளியைக் கைது செய்ய அப்பகுதியில் கூடுதல் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் எவரேனும் இதுகுறித்து தகவல் அறிந்தால் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்