Posted in

லண்டன் பயணம் முடிந்ததும் அதிரடி! அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாற்றப்படுகிறாரா? கேபினட்டில் கைவைக்கும் முதல்வர் விஜய்!

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் லண்டன் முதலீட்டுப் பயணம் நிறைவடைந்து சென்னை திரும்பியதும், தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் (Cabinet Reshuffle) செய்யப்படவுள்ளதாகக் கோட்டை வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. அமைச்சர்களின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் துறை சார்ந்த சர்ச்சைகளை அடிப்படையாகக் கொண்டு, சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படவும், சிலர் கேபினட்டில் இருந்து தூக்கப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் செயல்பாடுகள் தவெக மேலிடத்திற்குச் சில சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை ஆக்ரோஷமாக விமர்சிப்பதில் துடிப்புடன் செயல்பட்டாலும், உணர்வுப்பூர்வமான அறநிலையத்துறையைக் கையாள்வதில் அவர் எடுத்த சில அதிரடி முடிவுகள் மற்றும் நிர்வாக ரீதியான குளறுபடிகள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.

கோயில்களில் செல்போன் தடை விவகாரம், பழனி கோயில் நிலப் பத்திரப்பதிவு சர்ச்சைகள் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ் தொடர்பான குறைபாடுகள் குறித்துத் தலைமைக்கு ரகசிய அறிக்கைகள் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அறநிலையத்துறை போன்றsensitive-ஆன துறையை நிதானமாகக் கையாளுவதில் குறைபாடுகள் நிலவுவதால், அந்தப் பொறுப்பிலிருந்து அவரை மாற்றத் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்தில் நிதானமாகச் செயல்படக்கூடிய மூத்த தலைவரான அமைச்சர் வெங்கடரமணனுக்கு இந்து சமய அறநிலையத்துறை கூடுதலாகவோ அல்லது மாற்றாகவோ ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், மரிய வில்சன் மற்றும் தமிழன் பார்த்திபன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் பெயர்களும் புதிய அமைச்சரவைப் பட்டியலில் அடிபடுவதால், லண்டன் பயணம் முடிந்து முதல்வர் விஜய் சென்னை திரும்பியதும் பிறப்பிக்கப்படவுள்ள இந்த அதிரடி உத்தரவு அரசியல் களத்தில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.