Posted in

கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு AI ஆபத்து – முதன்முறையாக எச்சரித்த சீனாவின் உளவுத்துறைத் தலைவர்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) 77 ஆண்டுகால ஒற்றைக் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு நேரடியாகப் பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று சீனாவின் முதன்மை உளவுத்துறை அமைப்பான அரசுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் (MSS) தலைவர் சென் யிசின் (Chen Yixin) பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீன உளவுத்துறை இதழில் சென் யிசின் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில், “எதிரி நாடுகளும் தீய நோக்கம் கொண்ட அமைப்புகளும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான தகவல்களையும், பொய்ப் பிரச்சாரங்களையும் உருவாக்கி மக்களின் எண்ண ஓட்டத்தை மாற்ற முயலலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய ‘அறிவாற்றல் போர்’ (Cognitive Warfare) நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையையும், கம்யூனிஸ்ட் ஆட்சியின் இறையாண்மையையும் சீர்குலைக்கும் அபாயம் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலைநாடுகள் ஏஐ தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப மனித குல அச்சுறுத்தல்கள் குறித்து கவனம் செலுத்தி வரும் நிலையில், பெய்ஜிங் அரசாங்கம் ஏஐ தொழில்நுட்பத்தை ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அரசியல் ரீதியான அச்சுறுத்தலாகப் பார்ப்பதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் பகுப்பாய்வு செய்கின்றனர். ஏற்கனவே சீனா ஏஐ அல்காரிதம்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தங்கள் மற்றும் சென்சார் விதிகளுக்குப் உட்பட்ட தரவுகளை மட்டுமே அனுமதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், சர்வதேச அளவில் ஏஐ வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுக்குச் சீனா ஆதரவு அளித்தாலும், தங்களின் தொழில்நுட்பப் பொருளாதாரப் போட்டியில் அமெரிக்காவை முந்துவதற்காக உள்நாட்டில் ஏஐ ஆராய்ச்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஆட்சிப் பாதுகாப்பிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இடையே சமநிலையைப் பேணச் சீனா முற்படும் இச்சூழலில், கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த பகிரங்கப் பாதுகாப்பு எச்சரிக்கை உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.