அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ரென்னா ஓ’ரூர்க், ‘டஸ்டிங்’ எனப்படும் ஆபத்தான சமூக வலைத்தள ட்ரெண்டில் ஈடுபட்டதன் காரணமாக ஒரு வாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். இளம் வயதினர் ஸ்ப்ரே டியோடரண்ட், பெயிண்ட் தின்னர் அல்லது கீபோர்டு கிளீனர் போன்ற ஏரோசோல்களை உள்ளிழுத்து தங்களைப் படமெடுத்துக் கொள்ளும் இந்த ட்ரெண்ட் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஓ’ரூர்க் ஒரு துப்புரவுப் பொருளை உள்ளிழுத்த பிறகு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் மூளை இறப்பு அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த துயர சம்பவம் சமூக வலைத்தளங்களின் ஆபத்தான பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தன்னுடைய இளம் மகள் எப்போதும் பிரபலமாக வேண்டும் என்று கனவு கண்டதாக ரென்னாவின் தந்தை ஆரோன் ஓ’ரூர்க் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். “அவள் எப்போதும், ‘நான் பிரபலமாகப் போறேன் அப்பா. நீங்க பாருங்க. நான் பிரபலமாகப் போறேன்’ என்று சொல்லுவாள். துரதிர்ஷ்டவசமாக இது ஒரு சாதகமான சூழ்நிலையில் நடக்கவில்லை,” என்று அவர் AZFamily செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். ரென்னாவின் பெற்றோர்கள், இந்த கொடிய சமூக வலைத்தள ட்ரெண்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தங்களின் துயரக் கதையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இத்தகைய பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை, மணம் இல்லாதவை, மற்றும் பெற்றோரின் போதைப்பொருள் சோதனையில் சிக்காதவை என்பதால் இளம் வயதினரால் அதிகம் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ரென்னாவும் அவரது காதலரும் ஒரு ஆப் டெலிவரி சேவை மூலம் கீபோர்டு கிளீனரை வீட்டிற்கே வரவழைத்ததாக அவரது தாயார் டானா கூறியுள்ளார். “எந்த ஒரு பெற்றோரும் தங்கள் குழந்தையை உயிர் காக்கும் கருவிகளுடனும், வென்டிலேட்டருடனும், சுயமாக சுவாசிக்க முடியாமலும் பார்க்கும் நிலையை அனுபவிக்காமல் இருக்க, எங்கள் சோகத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரென்னாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது உறுப்புகள் குறைந்தது ஆறு பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன. இந்த துயரத்தின் மூலம் மற்றவர்களின் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் நிதி திரட்டி வருகின்றனர்.