ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் (Holyrood) முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு வரலாற்று நிகழ்வு அரங்கேறியுள்ளது. 2021-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து ஸ்காட்லாந்து சென்ற 29 வயதான டாக்டர் கியூ மணிவண்ணன் (Dr Q Manivannan) என்ற தமிழர், தற்போது அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக (MSP) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு திருநங்கையாகவும் (Transgender), தமிழ் பின்னணியைக் கொண்டவராகவும் இவர் படைத்துள்ள இந்தச் சாதனை, ஐரோப்பிய அரசியல் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவர் தன்னை ஒரு பாலின அடையாளமற்ற (Non-binary) நபராக அறிவித்துக் கொண்டு எடின்பரோ மற்றும் லோதியன் ஈஸ்ட் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் பின்னணியில் உள்ள உருக்கமான செய்தி என்னவென்றால், மணிவண்ணனிடம் ஐக்கிய இராச்சியத்தில் நிரந்தரமாகத் தங்குவதற்கான விசா (Visa) கூட இன்னும் முழுமையாக இல்லை. தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு வரை, தனது பட்டதாரி விசாவுக்கான (Graduate Visa) கட்டணமான £2,089 (சுமார் 2.25 லட்சம் ரூபாய்) திரட்ட முடியாமல் சக கட்சித் தொண்டர்களிடம் உதவி கேட்டு நிதி திரட்டியுள்ளார். ஒரு நாடாளுமன்ற வேட்பாளராக இருந்தும், அடுத்த மாதம் இந்த நாட்டில் இருக்க முடியுமா என்ற நிச்சயமற்ற நிலையில் போராடி வெற்றி பெற்றிருப்பது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெற்றிக்குப் பிறகு உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய டாக்டர் மணிவண்ணன், “என் பெயர் டாக்டர் கியூ மணிவண்ணன். நான் ஒரு தமிழ் திருநங்கை புலம் பெயர்ந்தவர். இந்த நாட்டில் வெறுப்புணர்வு கொண்டவர்கள் எதையெல்லாம் இழிவாகக் கருதுகிறார்களோ, அந்த அடையாளங்கள் அனைத்தையும் கொண்ட ஒருவன் இன்று உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக நிற்கிறேன்” என்று அதிரடியாகத் தெரிவித்தார். அதிகாரத்தில் பன்முகத்தன்மை என்பது இதுதான் என்றும், தனக்கு முன்னால் வைக்கப்பட்ட ஒவ்வொரு தடையையும் ஒரு படிக்கட்டாக மாற்றி முன்னேறியதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
இருப்பினும், இந்த வெற்றி அங்குள்ள பழமைவாதக் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு வேட்பாளருக்குத் தான் இந்த நாட்டில் தொடர்ந்து இருக்க முடியுமா என்பதே தெரியாத நிலையில், மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர் சூ வெப்பர் விமர்சித்துள்ளார். ஆனால், மணிவண்ணன் தற்போது கிடைத்துள்ள இந்த மூன்று ஆண்டு விசா காலத்தைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் ‘குளோபல் டேலண்ட் விசா’ (Global Talent Visa) பெற்று அங்கேயே தங்கிப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளார். தடைகளைத் தகர்த்து ஸ்காட்லாந்து அவையில் ஒலிக்கப் போகும் இந்தத் தமிழரின் குரல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.