Posted in

விஜய் முதுகிலும் குத்த தயங்காது காங்கிரஸ்: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி எச்சரிக்கை!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பரபரப்பான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தங்களின் தேர்தல் வெற்றியில் திமுகவுக்குப் பங்கில்லை என்றும், திமுக செய்த தவறுகளில் தங்களுக்குப் பங்கில்லை என்றும் காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், கூட்டணிக்குள் எழுந்துள்ள இந்த மோதல் போக்கு காங்கிரஸின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தங்களை முதுகில் குத்திவிட்டதாக திமுகவினர் தற்போது புலம்பி வருவதாகக் குறிப்பிட்ட தமிழிசை, காங்கிரஸிற்கு எப்போதும் மற்றவர்களை முதுகில் குத்தும் பழக்கமும் சரித்திரமும் உண்டு என்று சாடினார். எனவே, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவேக) தலைவர் சி. ஜோசப் விஜய்யும் காங்கிரஸ் கட்சி குறித்து மிகவும் விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். திமுகவை ஏமாற்றிய காங்கிரஸ், நாளை விஜய் முதுகிலும் குத்தத் தயங்காது என்றார்.

மேலும், மத்தியில் காங்கிரஸைக் காப்பாற்றுவதற்காகவே நாடாளுமன்றத்தில் பாஜகவை திமுகவினர் கண்மூடித்தனமாக எதிர்த்ததாகவும், அந்தத் தவறை திமுக தற்போது உணர்ந்திருக்கும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். விசிக தலைவர் திருமாவளவனின் அரசியல் நிலைப்பாட்டையும் விமர்சித்த அவர், ஒருபுறம் திமுக கூட்டணியில் இருப்பதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் தவேக அமைச்சரவையில் இருப்பதாகக் கூறுவது மக்களிடையே பெரும் குழப்பத்தையும், அரசியல் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்குவதாகக் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், தற்போதே ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பேசுவது சரியல்ல என்றும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு எவ்வாறு செயலாற்றுகிறது என்பதைச் சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் தமிழிசை கேட்டுக்கொண்டார். 60 ஆண்டுகால வரலாற்றில் தங்களின் சுய முயற்சியால்தான் அமைச்சரவையில் இடம் பிடித்ததாகக் கொண்டாடும் காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளுக்கு எப்போதும் துரோகமே இழைக்கும் என்பதால் தவேக அரசு உஷாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.