உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), விண்வெளித்துறையில் ஒட்டுமொத்த உலகையுமே வியக்கவைக்கும் ஒரு மாபெரும் இலக்கை அறிவித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஆண்டுக்கு 10,000 ராக்கெட் ஏவுதல்களை (Launches) நடத்த ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கக் கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) தலைவர் பிரையன் பெட்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவர் க்வின் ஷாட்வெல் (Gwynne Shotwell) தம்முடனான சந்திப்பின் போது இந்த ஐந்து ஆண்டு கால தொலைநோக்கு திட்டத்தை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 10,000 லான்ச் என்பது தற்போதைய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வேகத்தை விட சுமார் 60 மடங்கு அதிகமாகும். கடந்த 2025-ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மொத்தம் 170 விண்வெளிப் பயணங்களை மட்டுமே வெற்றிகரமாக முடித்திருந்தது. எலான் மஸ்க் தனது எக்ஸ் (X) தளத்தில், இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் விண்வெளிக்கு மணிக்கு ஒரு ராக்கெட் வீதம் ஏவப்படும் என்று கணித்திருந்த நிலையில், தற்போது நிறுவனம் அதைவிடப் பெரிய இலக்கை நோக்கி நகர்வது உறுதியாகியுள்ளது. இந்த அபரிமிதமான வளர்ச்சி, மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய நெட்வொர்க்கை உலகளவில் அசுர வேகத்தில் விரிவுபடுத்த உதவும் என்று கருதப்படுகிறது.
இருப்பினும், ஸ்பேஸ்எக்ஸின் இந்த அதிரடித் திட்டத்திற்கு அமெரிக்க அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்பான எஃப்.ஏ.ஏ (FAA) உடனடியாகப் பச்சைக் கொடி காட்டத் தயாராக இல்லை. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான லான்சுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ராக்கெட்டுகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை (Reliability) இன்னும் பன்மடங்கு நிரூபிக்க வேண்டும் என்று எஃப்.ஏ.ஏ தலைவர் பிரையன் பெட்ஃபோர்ட் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள் விண்ணில் பாயும்போது வான்வழிப் போக்குவரத்து தடைபடுதல் மற்றும் விண்வெளிக் குப்பைகள் (Space Debris) போன்ற கடுமையான அச்சுறுத்தல்கள் ஏற்படும் என அரசு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது நான்கு தளங்களில் இருந்து ஆண்டுக்கு 195 லான்சுகளை மட்டுமே நடத்த அனுமதி பெற்றுள்ளது. இந்த நிலையில் 10,000 என்ற இலக்கை எட்ட வேண்டுமானால், தற்போதைய தனித்தனி லான்ச் அனுமதி முறையை மாற்றி, விமான நிறுவனங்களுக்கு வழங்குவதைப் போன்ற ‘ஆப்பரேட்டிங் லைசென்ஸ்’ (Airline-style Licensing) முறையைக் கொண்டுவர வேண்டும் என்று விண்வெளி வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் களமிறங்குவதற்கான (IPO) ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்த மெகா லான்ச் திட்டம் விண்வெளி வர்த்தகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.