Posted in

இன வெறியில் கைது செய்த பொலிஸ்- வழக்கு போட்டு 1 லட்சம் பவுண்டுகளை வென்ற ஆபிரிக்க இளைஞர் !

பெற்ற தாயைக் காப்பாற்றப் போராடிய 16 வயதுச் சிறுவன்! கொலை முயற்சி வழக்கில் கைது செய்த லண்டன் மெட் போலீஸ் வழங்கிய ரூ.1.4 கோடி இழப்பீடு!

ஒரு ஹாலிவுட் க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியைப் போல லண்டனின் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் அந்த பயங்கரச் சம்பவம் அரங்கேறியது. மன உளைச்சலால் தற்கொலை செய்ய முடிவெடுத்த ஒரு தாய், அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து திடீரென கீழே குதித்தார். இதைக் கண்டு பதறிய அவரது 16 வயது கறுப்பினச் சிறுவன், அலறியடித்தபடி ஓடிச் சென்று தனது தாயைக் காப்பாற்றப் போராடினான். ஆனால், சம்பவ இடத்திற்கு அதிரடியாக ஆயுதங்களுடன் விரைந்து வந்த லண்டன் மெட்ரோபாலிட்டன் (Met Police) போலீசார், தாயைக் காப்பாற்றத் துடித்த அந்த அப்பாவிச் சிறுவனை, “தாயைக் கொலை செய்ய முயன்றான்” (Attempted Murder) என்ற கொடூரக் குற்றச்சாட்டின் கீழ் முரட்டுத்தனமாகக் கைது செய்தனர்.

காவல் துறையினரின் இந்த கண்மூடித்தனமான நடவடிக்கைக்குப் பின்னால் இருந்த இனவெறி மற்றும் நிறவெறி பாகுபாடு தற்பொழுது நீதிமன்றக் கூண்டில் அம்பலமாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் முறையான எவ்வித விசாரணையும் நடத்தாமல், கறுப்பினச் சிறுவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனைக் குற்றவாளியாகச் சித்தரித்து விலங்கிட்டது போலீஸ். இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்தச் சிறுவன், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் மாபெரும் சட்டப் போராட்டத்தைத் தொடங்கினான். இந்த வழக்கில் இன்று அதிரடித் தீர்ப்பளித்த நீதிமன்றம், மெட் போலீஸாரின் இனப் பாகுபாட்டைக் கடுமையாகக் கண்டித்ததோடு, பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு 130,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 1.4 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

அந்தக் கொடூரமான நள்ளிரவில், தனது தாய் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், போலீசார் அந்த இளைஞனைக் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று விடிய விடியக் கொடூரமான முறையில் விசாரித்துள்ளனர். “நான் என் அம்மாவைக் தள்ளவில்லை, அவரைக் காப்பாற்றத்தான் ஓடினேன்” என்று அந்தச் சிறுவன் கதறியபோதும், அவனது வார்த்தைகளை லண்டன் போலீஸ் துளியும் மதிக்கவில்லை. பின்னர், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் தடய அறிவியல் சோதனைகளின் முடிவில், அந்தத் தாய் தானாகவே குதித்தார் என்பதும், சிறுவன் நிரபராதி என்பதும் நூறு சதவீதம் உறுதியானது.

பாதுகாக்க வேண்டிய காவல் துறையே இனவெறிப் போக்கோடு ஒரு நிரபராதிச் சிறுவனைத் தற்கொலை செய்ய முயன்ற தாயின் கொலைகாரனாகச் சித்தரித்த இந்தச் சம்பவம், பிரிட்டன் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு மற்றும் 1.4 கோடி ரூபாய் இழப்பீடு ஆகியவை, லண்டன் மெட் போலீஸாரின் முகத்திரையைக் கிழித்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தச் சட்டப் போராட்டத்தின் மூலம் அந்த இளைஞன் தனது நேர்மையை நிரூபித்துள்ளதுடன், பிரிட்டன் காவல் துறையின் நிறவெறிப் பக்கச்சார்பான நடவடிக்கைகளுக்கு ஒரு சம்மட்டி அடியையும் கொடுத்துள்ளார்.