டெல் அவிவ்: காசா முனையில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையிலும், அங்கு நிலைகொண்டுள்ள இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என்றும், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் முழுமையாக ஒழிக்கப்படும் வரை ராணுவப் பின்வாங்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். காசாவில் உள்ள இஸ்ரேலியப் படைகளை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்ட போது அவர் இந்த அதிரடி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் இஸ்ரேலிய ராணுவக் கட்டுப்பாட்டு மண்டலத்தையும் பிரிக்கும் ‘மஞ்சள் கோடு’ (Yellow Line) பகுதிக்கு அருகே வீரர்களிடம் உரையாற்றிய நெதன்யாகு, “நாங்கள் இந்தப் பகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்; நாங்கள் பின்வாங்கப்போவதில்லை, இதே எல்லைக்கோட்டில் தொடர்ந்து நீடிப்போம்” என உறுதியளித்தார். மேலும், காசா முனையின் 60 சதவீதப் பகுதிகள் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், தங்கள் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதக் கூறுகளைத் தினமும் அழித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா மற்றும் சர்வதேச மத்தியஸ்தர்கள் காசாவில் முழுமையான அமைதியைக் கொண்டு வரவும், இஸ்ரேலியப் படைகளை வெளியேற்றவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், நெதன்யாகுவின் இந்த நேரிட விஜயமும் அறிவிப்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை முழுமையாகவும் உண்மையாகவும் கைவிடும் வரை ராணுவத்தை வாபஸ் பெற முடியாது என்ற தங்களின் நிலைப்பாட்டில் இஸ்ரேல் அரசு உறுதியாக உள்ளதை இந்த நகர்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளையில், காசா முனையிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்கள் தயாராக இருப்பதாகவும், அதற்கு அமெரிக்காவின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ள கருத்து சர்வதேச அளவில் மீண்டும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் அமைதித் திட்டங்களுக்கு இடையே இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் நடத்தி வரும் இந்த ராணுவ நடவடிக்கைகள் மற்றும் கடுமையான நிலைப்பாடுகள், மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி திரும்புவதில் மீண்டும் முட்டுக்கட்டையை உருவாக்கியுள்ளன.