தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட உத்தரவாத ஓய்வூதியத் திட்டமான ‘டாப்ஸ்’ (TAPS – Tamil Nadu Assurance Pension Scheme) திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு எந்தப் பெரிய பலனும் இல்லை என்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கே அதிக லாபம் கிடைப்பதாகவும் சிபிஎஸ் (CPS) ஒழிப்பு இயக்கம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் தரவுகளைச் சுட்டிக்காட்டி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்தாமல், இந்த புதிய திட்டத்தைக் கொண்டு வந்ததே இந்த அதிருப்திக்குக் காரணமாகும்.
அரசின் புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.94 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உள்ள நிலையில், அதில் வெறும் 16 சதவீதத்தினர் (1,13,380 பேர்) மட்டுமே 80 வயதைக் கடந்து கூடுதலாக 20 சதவீத ஓய்வூதிய உயர்வைப் பெறுகின்றனர். அதாவது, மீதமுள்ள 84 சதவீத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 80 வயதை எட்டுவதற்கு முன்பாகவே, எந்தவிதமான கூடுதல் ஓய்வூதிய உயர்வும் இல்லாமல் மரணமடைந்து விடுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையைச் சுட்டிக்காட்டி இந்தத் திட்டம் ஒரு ‘கானல் நீர்’ என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் விமர்சித்துள்ளது.
இந்த டாப்ஸ் திட்டத்தின் கீழ், ஒரு ஊழியர் தனது 25 ஆண்டுகால (300 மாதங்கள்) பணிக்காலத்தில் தனது சம்பளத்திலிருந்து 10 சதவீதப் பங்களிப்புத் தொகையைச் செலுத்துகிறார். ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டாலும், அவர் மற்றும் அவரது மனைவி குறுகிய காலத்திலேயே மரணமடையும் பட்சத்தில், அவர் 25 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேர்த்த அந்த 10 சதவீதப் பங்களிப்புத் தொகை அவரது வாரிசுகளுக்குத் திரும்பக் கிடைப்பதில்லை. அந்த ஒட்டுமொத்தப் பணத்தையும் தமிழக அரசே தன் வசம் வைத்துக் கொள்கிறது. இதனால் இந்தத் திட்டம் ஊழியர்களுக்கானது அல்ல, முழுக்க முழுக்க அரசுக்குச் சாதகமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வராத நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் வாக்குறுதியில் “டாப்ஸ் திட்டம் ஒழிக்கப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் கனிவுடன் பரிசீலிக்கப்படும்” என அறிவித்திருந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் தவெக மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய திட்டங்களைக் கைவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.