தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், அரசு சார்பில் எம்.எல்.ஏ-க்களுக்குப் புதிய கார்கள் மற்றும் வாகனப் பராமரிப்புப் படிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கார்களைத் தேர்வு செய்வதற்கானப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இதன் முதற்கட்டமாக, மஹிந்திரா நிறுவனத்தின் பல்வேறு ரக சொகுசு மற்றும் எஸ்சிவி கார்கள் சென்னைத் தலைமைச் செயலக வளாகத்திற்கு நேரில் கொண்டு வரப்பட்டு நிறுவன அதிகாரிகளால் காட்சிப்படுத்தப்பட்டன.
தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகளுடன் இணைந்து மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ரகக் கார்களை நேரில் பார்வையிட்டு அதன் வசதிகள் குறித்தும், ஓட்டுநர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும், கார்களின் செயல்திறனை நேரில் உணர்ந்து கொள்வதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் தலைமைச் செயலக வளாகத்திலேயே அந்தக் கார்களை ‘டெஸ்ட் டிரைவ்’ செய்து பார்த்தனர்.
எம்.எல்.ஏ-க்கள் தங்களது தொகுதிகளில் உள்ள கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு எளிதாகப் பயணித்து மக்கள் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, இந்த வாகனங்கள் தேர்வு செய்யப்படவுள்ளன. பல்வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் மாடல்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் சூழலில், மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டு டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்ட நிகழ்வு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இந்த வாகனங்கள் மற்றும் பராமரிப்பு உதவிகள் மூலம், தொகுதி மக்களின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்து களப்பணிகளைச் செவ்வனே ஆற்ற முடியும் எனப் பல எம்.எல்.ஏ-க்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தலைமைச் செயலக வளாகத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு டெஸ்ட் டிரைவ் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது