கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக வேட்பாளரை வீழ்த்தி முதன்முறையாகத் தவெக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கனிமொழி சந்தோஷ். இவர் பதவியேற்றதைத் தொடர்ந்து தனது தொகுதியில் களப்பணிகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, துடியலூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காய்கறிச் சந்தைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆனால், இந்த ஆய்வுகளுக்கு முன்னதாக அவர் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளைத் தனது சொந்த இல்லத்திற்கு வரவழைத்து, தொகுதிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் புகைப்படங்களை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
அரசு விதிமுறைகளின்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டுமானால், அதைத் தொகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் அல்லது அரசு சார்ந்த பொது இடங்களில்தான் நடத்த வேண்டும். அதை விடுத்து, அரசு அதிகாரிகளைத் தங்களது சொந்த வீட்டிற்கு வரவழைத்து உத்தரவிடுவது மரபுகளுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி தவெக-வின் சொந்தக் கட்சி முக்கிய நிர்வாகிகளே இந்தச் செயலுக்குப் பகிரங்கமாகத் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து விவாதங்களை உருவாக்கியுள்ளனர்.
இந்தத் தொடர் சர்ச்சை குறித்து கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் வீடியோ மூலம் அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளார். அதில், “நான் பல ஆண்டுகளாக ஜோதிடராகப் பணியாற்றி மக்கள் பலரைச் சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகத்தில்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அது எனது தனிப்பட்ட வீடு அல்ல; தொகுதி மக்கள் தங்களது குறைகளை எளிதாக வந்து தெரிவிப்பதற்காக தற்காலிகமாகப் பயன்படுத்தப்படும் மக்கள் தொடர்பு அலுவலகம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் நலப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் மட்டுமே இந்தத் தணிக்கைக் கூட்டம் அவசரமாக நடத்தப்பட்டதாகவும், இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கட்சித் தலைவர் விஜய்யின் கடுமையான அரசியல் ஒழுங்கு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் தவெக-வின் புதிய எம்.எல்.ஏ-க்கள், அதிகாரப்பூர்வ நெறிமுறைகளைத் (Protocols) தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என மூத்த அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெருநாய்க்கடி மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் சந்தை உள்கட்டமைப்பு போன்ற மக்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண அவர் எடுத்த முயற்சிகள் பாராட்டப்பட்டாலும், இந்த ‘அலுவலகச் சர்ச்சை’ தவெக-வின் தொடக்கக்கால நிர்வாக அனுபவக் குறைபாட்டையே காட்டுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.