Posted in

தாய், தம்பியைப் படுகொலை செய்த இந்திய வம்சாவளிச் சிறுவன்; ChatGPT கொடுத்த அதிர்ச்சித் திருப்பம்!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள ஆக்டன் (Acton) நகரில், 17 வயதான இந்திய வம்சாவளிச் சிறுவன் அர்ஜுன் அரவிந்த் (Arjun Aravind), தனது தாய் சுதா வெங்கடேசன் (45) மற்றும் 14 வயது தம்பி சித்தார்த் அரவிந்த் ஆகியோரைச் கொடூரமாகப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவன் செயற்கை நுண்ணறிவுச் செயலியான ChatGPT-ஐ பயன்படுத்தித் தன் குடும்பத்தைக் கொல்வது குறித்த ‘கற்பனைகள் மற்றும் வழிமுறைகளை’ ஆராய்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, வேலைக்குச் சென்ற அர்ஜுனின் தந்தை தனது மனைவி மற்றும் இளைய மகனைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாமல் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலிஸார், வீட்டில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சுதா மற்றும் சித்தார்த்தின் உடல்களைக் கைப்பற்றினர். அப்போது வீட்டில் இல்லாத அர்ஜுன், தனது தாயாரின் காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்ற நிலையில், அண்டை நகரான வேலேண்டில் (Wayland) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் வைத்துப் போலிஸாரால் கைது செய்யப்பட்டான்.

கைது செய்யப்பட்ட அர்ஜுனின் மொபைல் போன் மற்றும் கணினியை ஆய்வு செய்த போலிஸாருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்தன. அர்ஜுன் கடந்த சில நாட்களாக இணையதளத்திலும், ChatGPT செயலியிலும் “சொந்தக் குடும்பத்தினரைக் படுகொலை செய்வது எப்படி?” என்பது குறித்தும், அதற்கான கற்பனைக் கோட்பாடுகள் குறித்தும் தேடிப் பார்த்திருப்பது தெரியவந்துள்ளது. AI தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இத்தகைய கொடூர எண்ணங்களைச் சிறுவன் வளர்த்துக் கொண்டது காவல்துறையினர் மற்றும் புலனாய்வு அமைப்புகளைத் திகைக்க வைத்துள்ளது.

சிறுவன் அர்ஜுன் அரவிந்த் மீது இரண்டு கொலை வழக்குகள், தாக்குதல் மற்றும் கார் திருட்டு உட்படப் பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கொலைக் குற்றம் இடம்பெற்றுள்ளதால், சிறுவர் நீதிமன்றத்திலிருந்து வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறவுள்ளது. இந்திய வம்சாவளிக் குடும்பத்தில் நடந்த இந்த சோக சம்பவமும், இதில் ChatGPT செயலியின் ஆபத்தான தாக்கமும் உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.