Posted in

மகளிருக்கு மாதம் ₹2,500 & 6 இலவச சிலிண்டர்? பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மரிய வில்சன் அளித்த விளக்கம்!

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் (2026–27), பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த “மகளிருக்கு மாதம் ₹2,500 உரிமைத் தொகை” மற்றும் “ஆண்டுக்கு 6 இலவசச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்” ஆகியவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது மகளிர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து எழும் கேள்விகளுக்குத் தமிழ்நாடு நிதி அமைச்சர் என். மரிய வில்சன் சட்டப்பேரவையில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

பட்ஜெட் உரையின் போது மாநிலத்தின் நிதி நிலைமை குறித்துப் பேசிய நிதியமைச்சர், “கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் கடன் சுமை இரு மடங்காக உயர்ந்து, நிதிப் பற்றாக்குறை உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் புதிய பிரம்மாண்ட திட்டங்களை உடனடியாக அமல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் அரசிடம் மிகவும் குறைவாகவே உள்ளது” என்று சுட்டிக்காட்டினார். மாநிலத்தின் கடன் அளவைக் குறைத்து, நிதிச் சூழலைச் சீரமைக்க அரசுக்குக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் காலம் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நிதி நெருக்கடி நிலவினாலும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தேர்தலின் போது மக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றும்” என்று உறுதியளித்தார். முதல் கட்டமாக 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் பிற முக்கியத் திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்த அவர், பொருளாதாரச் சீரமைப்புப் பணிகளுக்கு ஏற்ப மகளிருக்கான மாத உதவித்தொகை உயர்வு மற்றும் இலவச எரிவாயு சிலிண்டர் திட்டங்களும் அடுத்தடுத்து அமல்படுத்தப்படும் என்றார்.

அரசுக்குச் சுமை ஏற்படுத்தாத வகையில் நிதி ஆதாரங்களைப் பெருக்கவும், முறைகேடுகளைத் தடுத்து கசிவுகளை அடைக்கவும் அரசு பல குழுக்களை அமைத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிதி மேலாண்மை சீரடைந்தவுடன், மகளிர் நலன் சார்ந்த இந்த இரண்டு பிரதான வாக்குறுதிகளும் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.