Posted in

600-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு காவல்துறையில் தங்களது துறைகளில் மிகச் சிறப்பாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களைக் கௌரவிக்கும் விதமாக, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இச்சிறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேரில் கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட காவல் துறையினருக்குக் முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

முன்னதாக, விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்குத் தமிழ்நாடு காவல்துறையின் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படை மற்றும் குதிரைப்படையினர் கலந்துகொண்ட கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், 2023, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட 665-க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதுகளை முதலமைச்சர் வழங்கிப் பாராட்டினார்.

சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல், போதைப்பொருள் கடத்தலை முழுமையாக ஒழித்தல் மற்றும் பொதுமக்கள் சேவையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் புகாருமன்றிச் சிறப்பாகச் செயல்பட்ட காவலர்கள் இந்த விருதுகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விருதுகளைப் பெற்றுக் கொண்ட காவல் அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் நேரில் வாழ்த்திய முதலமைச்சர், காவல்துறையினரின் நலன் காக்கத் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என உறுதி அளித்தார்.

தலைநகரில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (DGP), சென்னை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் காவல் துறையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் தீவிரமாகச் செயல்படும் காவலர்களுக்கு முதலமைச்சரே நேரில் பதக்கங்களை வழங்கி கௌரவித்தது, காவல் துறையினரிடையே பெரு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.