சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியேற்பு விழாவில், தமிழகமே வியந்து பார்க்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. முதல்வர் விஜய்யுடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் அமைச்சராகப் பதவியேற்க மேடைக்கு வந்தபோது, முதல்வர் விஜய் தனது இருக்கையை விட்டு எழுந்து நின்று அவருக்குச் சிறப்பான மரியாதையைச் செலுத்தினார்.
விஜய்யின் இந்த அதிரடி மாற்றத்தையும், பெரியவர்கள் மீதான அவரது மரியாதையையும் கண்ட ராகுல் காந்தி, தானும் உடனடியாக எழுந்து நின்று செங்கோட்டையனை கௌரவித்தார். இதைப் பார்த்த அரங்கத்தில் இருந்த ஒட்டுமொத்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். பதவியேற்பு முடிந்ததும் ராகுல் காந்தியின் காதில் குனிந்து, “இவர் எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி” என்று விஜய் பெருமையுடன் அறிமுகப்படுத்திய தருணம், அரங்கில் இருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
தன்னைப் பாராட்டிய ராகுல் காந்திக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்த முதல்வர் விஜய், தனது வெற்றிக்குக் காரணமான ‘குட்டீஸ்’களுக்குத் தனிப்பட்ட முறையில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். “வீட்டில் உள்ள குழந்தைகள்தான் தங்களின் அப்பா, அம்மா மற்றும் தாத்தா, பாட்டிகளிடம் ‘விஜய் மாமாவுக்குத் தான் ஓட்டுப் போட வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்து அனுப்பி வைத்தார்கள்” என்று விஜய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
காலம் காலமாக திராவிடக் கட்சிகளுக்கு வாக்களித்து வந்த முதியவர்களின் வாக்குகளை, தவெக பக்கம் திருப்பிய அந்தச் சிறுவர்களின் அன்பிற்குப் பிரதிபலனாக, “குட்டீஸ்களின் கல்விக்காகவே எனது அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும்” என்று விஜய் அதிரடியாக அறிவித்தார். அரசியலில் அதிகாரத்தைக் காட்டாமல், பண்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திய விஜய்யின் இந்தச் செயல், தமிழக மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மதிப்பை மேலும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.