மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ராணுவ மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தொழில்நுட்ப ராட்சதனான ‘அமேசான்’ (Amazon) நிறுவனத்தின் பிரதானத் தரவு மையத்தின் (Data Infrastructure) மீது ஈரான் பல குரூஸ் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க ராணுவத்திற்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாகக் கூறி, ஈரான் தனது ‘நாசர்-2’ (Operation Nasr 2) போரின் 24-வது அலையாக இந்தத் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மீதான தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேவேளையில், அண்டை நாடான குவைத்தின் மின் உற்பத்தி மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் பிரம்மாண்ட ஆலைகளைக் குறிவைத்தும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தித் தீவிரத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. தொடர் தாக்குதல்கள் காரணமாகக் குவைத்தின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்களில் தீப்பற்றிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல உற்பத்தி அலகுகள் உடனடியாகச் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் குவைத்தில் கடும் மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதற்கு முன்பாக ஈரானின் கட்டமைப்பு நிலையில் உள்ள ‘தார்கோவின்’ (Darkhovin) அணுமின் நிலையத்தின் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே, பஹ்ரைனில் உள்ள அமேசான் டேட்டா சென்டர் மற்றும் முகாரக் (Muharraq) பகுதியிலுள்ள அமெரிக்க ராணுவ வான் பாதுகாப்பு ரேடார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான கிளவுட் தரவு மையங்கள் (Cloud Data Centers) மீது இராணுவ ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, சர்வதேச ரீதியில் தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் இந்தத் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளிலும் ஆபத்து கால அபாயச் சங்கொலிகள் (Sirens) முழங்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் குடிசார் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மீது ஈரான் நடத்தி வரும் இந்த நேரடித் தாக்குதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் இணையப் பாதுகாப்பு, ஆற்றல் துறை மற்றும் விநியோகச் சங்கிலியை முற்றிலுமாக முடக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.