ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதாகக் கூறி பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தனது கடற்படைகளை நிலைநிறுத்த முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஈரானின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் காசெம் கரீபாபாடி, “ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முழு அதிகாரம் ஈரானுக்கு மட்டுமே உண்டு. அமெரிக்காவின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் துணை போகும் வகையில் பிரான்ஸ் அல்லது பிரிட்டன் தனது போர்க்கப்பல்களை இங்கே அனுப்பினால், எங்கள் ஆயுதப் படைகளிடமிருந்து தீர்க்கமான மற்றும் உடனடி பதிலடியைச் சந்திக்க நேரிடும்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானின் இந்தத் தீவிர எச்சரிக்கையைத் தொடர்ந்து, நைரோபியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் விளக்கம் அளித்தார். “ஹார்முஸ் ஜலசந்தியில் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தும் எண்ணம் பிரான்சுக்கு ஒருபோதும் இருந்ததில்லை (Never envisaged). எங்களது நோக்கம் சர்வதேச கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது மட்டுமே. அதுவும் ஈரானுடன் ஒருங்கிணைந்து (Coordinated with Iran) செயல்படுவதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடல்வழி முற்றுகைக்குப் பிரான்ஸ் ஆதரவு அளிக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், பிரிட்டன் தனது ‘எச்.எம்.எஸ் டிராகன்’ (HMS Dragon) என்ற போர்க்கப்பலை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளது. போர்ச் சூழல் தணிந்த பிறகு, கடல் கண்ணிவெடிகளை அகற்றவும் வர்த்தகக் கப்பல்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரிட்டன் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ஈரான் இதனைத் தனது இறையாண்மை மீதான அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் இந்த ஜலசந்தி வழியாகவே செல்கிறது என்பதால், இங்கு ஏற்படும் சிறிய மோதலும் உலகப் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கும்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி ஒரு போர்க்களமாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது. ஈரானின் ‘வெள்ளை அறிக்கை’ போன்ற எச்சரிக்கைகளும், அமெரிக்காவின் பிடிவாதமான தடைகளும் இந்தப் பிராந்தியத்தை அமைதியற்ற சூழலுக்குத் தள்ளியுள்ளன. பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்க முயன்றாலும், ஈரானின் ராணுவ எச்சரிக்கை ஐரோப்பிய நாடுகளைப் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.