Posted in

ரூ.4000 அக்கவுண்ட்டுக்கு வருமா? தவெக அரசின் மெகா பிளான்… இளைஞர்களுக்கான திட்டம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளின்படி, மாநிலத்தில் உள்ள வேலையில்லாத இளைஞர்களைக் கைதூக்கி விடும் வகையில் ‘வேலையில்லா பட்டதாரிகளுக்கான நிதி உதவித் திட்டம்’ குறித்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. படித்து முடித்து விட்டு வேலை தேடும் இடைப்பட்ட காலத்தில் இளைஞர்கள் தங்களது சொந்தச் செலவுகளுக்காகப் பிறரை எதிர்பார்த்து நிற்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழகத்தில் வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கி அவர்களின் எதிர்காலப் போட்டித் தேர்வுகளுக்கும் நேர்முகத் தேர்வுகளுக்கும்த் தயாராக உறுதுணையாக இருப்பதாகும். அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று, 29 வயதைக் கடந்தும் வேலை கிடைக்காமல் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகையாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, டிப்ளமோ (Diploma) முடித்த வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் யாருக்குக் கிடைக்கும் என்பது குறித்த தகுதி வரம்புகள் விரைவில் அரசாணையாக (GO) வெளியாகவுள்ள நிலையில், சில அடிப்படை நிபந்தனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பயன்பெற விரும்பும் இளைஞர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவராகவும், மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (Employment Exchange) தங்களது கல்வித் தகுதியைப் பதிவு செய்து காத்திருப்பவராகவும் இருக்க வேண்டும். மேலும், அவர்கள் எந்தவொரு தனியார் அல்லது அரசுத் துறையிலும் மாதாந்திரச் சம்பளம் பெறும் பணியிலோ அல்லது சுயதொழிலிலோ ஈடுபட்டிருக்கக் கூடாது.

இந்த நிதியுதவியானது இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாகப் பயனாளிகளின் வங்கித் கணக்குகளிலேயே ‘டிபிடி’ (Direct Benefit Transfer – DBT) மூலம் வரவு வைக்கப்பட உள்ளது. மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அதிகாரப்பூர்வ நிதியொதுக்கீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு, அதன்பின்னர் பிரத்யேக இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால், தமிழக இளைஞர்கள் இந்த அறிவிப்பை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Leave a Reply