இன்றைய உலகில் மனிதர்கள் சுமார் 7,500 மொழிகளைப் பேசி வரும் நிலையில், சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் 20,000 முதல் 75,000 மொழிகள் வரை பேசப்பட்டு வந்ததாக சர்வதேச ஆய்வாளர்களின் புதிய அறிவியல் ஆய்வு (Science Journal) தெரிவித்துள்ளது. ‘மொழிகளின் பொற்காலம்’ (Linguistic Golden Age) என்று அழைக்கப்படும் அக்காலத்தில் மனித குலம் எண்ணற்ற தனித்துவமான மொழிகளைப் பேசி வந்ததாகவும், காலப்போக்கில் அவை முற்றிலுமாக அழிந்து மௌனமாகிவிட்டதாகவும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் அறிமுகமானதைத் தொடர்ந்து, மனித மக்கள் தொகை அதிவேகமாகப் பெருகியது. ஆற்றுப் பள்ளத்தாக்குகள், தீவுகள் மற்றும் மலைப் பகுதிகளில் தனித்தனியாகக் குடியேறிய மனித சமூகங்கள், தங்களின் புவியியல் சூழலுக்கு ஏற்ப முற்றிலும் புதிய சொற்கள் மற்றும் இலக்கணங்களுடன் பல்லாயிரக்கணக்கான தனித்துவமான மொழிகளை உருவாக்கினர். இதன் காரணமாகக் கிறிஸ்துவுக்கு முன் 1000 முதல் கிறிஸ்துவுக்குப் பின் 1000 வரையிலான காலகட்டத்தில் உலகில் மொழிகளின் எண்ணிக்கை அதன் உச்சத்தைத் தொட்டது.
ஆனால், இந்த மொழியியல் பொற்காலம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. ரோமானியப் பேரரசு, ஹான் சீனப் பேரரசு உள்ளிட்ட மாபெரும் மத்திய அதிகாரமிக்கப் பேரரசுகளின் எழுச்சி மற்றும் விரிவாக்கம் காரணமாகச் சிறிய சமூகங்களின் மொழிகள் படிப்படியாக நசுக்கப்பட்டன. நிர்வாகம், வரி வசூல், வர்த்தகம் மற்றும் சட்ட திட்டங்களுக்குப் பேரரசுகளின் பொதுவான அதிகாரப்பூர்வ மொழிகள் கட்டாயமாக்கப்பட்டதால், சிறிய பிராந்திய மொழிகளைப் பேசிய மக்கள் தாய்மொழியைக் கைவிட்டுப் பேரரசுகளின் மொழிகளுக்கு மாறத் தொடங்கினர்.
காலனித்துவத்திற்கு முன்பே, அதாவது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே பேரரசுகளின் வருகையால் பல்லாயிரக்கணக்கான மொழிகள் எழுத்துவடிவம் பெறாமலேயே தடயமின்றி அழிந்துவிட்டன என்று சர்வதேச மானுடவியல் மற்றும் கணினி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இன்று நாம் பேசும் மொழிகள் அனைத்தும் அந்த மாபெரும் வரலாற்று அழிவிலிருந்து தப்பிப் பிழைத்த “எஞ்சிய மாதிரிகள்” (Survivor Sample) மட்டுமே என்றும், அவற்றுடன் எண்ணற்ற பண்பாட்டு பாரம்பரியங்களும் மறைந்துவிட்டதாகவும் அந்த ஆய்வு கவலையுடன் தெரிவிக்கிறது.