முன்னாள் பிரதமர் மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் மீதான நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு வழக்கை ரத்து செய்து, அவருக்கு முழுமையான ‘க்ளீன் சிட்’ அளித்து இந்திய உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. 2015-ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை ரத்து செய்த நீதிபதிகள், சிபிஐ தாக்கல் செய்த மூடல் அறிக்கைகளை (Closure Reports) ஏற்றுக்கொண்டு வழக்கை முழுமையாக முடித்துவைத்துள்ளனர்.
தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. 2005-ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள தலபிரா-II நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அப்போதைய நிலக்கரித் துறைப் பொறுப்பையும் வகித்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக விசாரணை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முற்பட்டது. ஆனால், இ வழக்கில் குற்றச்சாட்டுக்கான எவ்வித ஆதாரமும் இல்லை எனக் கூறி சிபிஐ தாக்கல் செய்த இரண்டு மூடல் அறிக்கைகளை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது தவறானது என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மன்மோகன் சிங் 2024 டிசம்பரில் காலமானதால் இந்த மேல்முறையீட்டு வழக்கை முடித்துவைத்திருக்க முடியும் என்றாலும், அவரது நேர்மை மற்றும் புகழுக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கும் வகையில் வழக்கை விரிவாக ஆய்வு செய்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர். “விசாரணை அமைப்பான சிபிஐ சமர்ப்பித்த அறிக்கையை நிராகரித்து, மன்மோகன் சிங் மீது கிரிமினல் வழக்காக விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றத்திற்கு எவ்வித வலுவான ஆதாரங்களோ காரணங்களோ இல்லை” என்று அமர்வு தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
மன்மோகன் சிங் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி, முன்னாள் பிரதமர் மீதான தவறானக் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகள் துடைக்கப்பட வேண்டும் என வாதாடினர். உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம், பத்தாண்டு காலத்திற்கும் மேலாக நீடித்து வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிலக்கரிப் பேர ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பெயர் முழுமையாகப் புனிதப்படுத்தப்பட்டு, வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.