Posted in

குறுக்க இந்த எடப்பாடி வந்தா? முதல் ஆளாகக் களத்தில் இறங்கிய அதிமுக: இடைத்தேர்தலுக்கு வேட்புமனு விநியோகம் தொடக்கம்!

தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சிகள் வியூகங்களை வகுப்பதற்கு முன்பாகவே வேட்பாளர் விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் ஆளாகக் களத்தில் இறங்கியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காலியான 7 தொகுதிகளில், முதற்கட்டமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்குச் செப்டம்பர் 9-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, அக்டோபர் 6-ல் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செப்டம்பர் 8 முதல் விநியோகிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்து முந்திக்கொண்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் இத்தொகுதிகள் காலியாயின. இந்தச் சூழலில், ஆளுங்கட்சியான தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவதா அல்லது ஆதரவு அளிப்பதா என்ற குழப்பத்திலும், திமுக தனது நிலைப்பாட்டை முடிவு செய்வதிலும் தாமதம் காட்டி வரும் வேளையில், அதிமுகவின் இந்த அதிவேகப் பிரசார ஆயத்தப் பணிகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

கொங்கு மண்டலத்தில் வலுவான தாராபுரம் மற்றும் வடதமிழகத்தின் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுத் தனது அரசியல் பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முனைப்பு காட்டி வருகிறார். கூட்டணி முரண்பாடுகள் மற்றும் எதிரணிகளின் குழப்பத்தைப் பயன்படுத்தி, “எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டு அடிக்கும் இந்த அரசியல் அடியால்” இடைத்தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.