தமிழகக் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நகர்வுகள் மற்றும் அதன் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சார முறைகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “கரூரில் நடந்த சம்பவங்கள் மற்றும் தொடர் பின்னடைவுகளுக்குப் பிறகு விஜய்யின் அரசியல் கதை முடிந்துவிட்டது என்றே நாங்கள் நினைத்தோம்; ஆனால், தவெகவின் தற்போதைய அரசியல் போக்கைப் பார்த்து எனக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது” என அவர் பரபரப்பாகப் பேசியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், சமூக வலைத்தளங்களில் பல ஆயிரம் கோடிகளை வாரியிறைத்து, கவர்ச்சியான வசனங்கள் மற்றும் பி.ஆர் (PR) விளம்பரங்கள் மூலம் ‘ஜென் ஸீ’ (Gen Z) இளைய தலைமுறையினரை விஜய் மூளைச்சலவை செய்து வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். கொள்கைகளோ அல்லது தெளிவான திட்டங்களோ இல்லாத இதுபோன்ற விபரீதமான விளம்பர அரசியல் போக்கால் தமிழகத்தின் எதிர்காலமே பாழாகிவிடும் என்று அவர் தனது கவலையைத் தெரிவித்தார்.
அதிமுக எத்தனையோ சோதனைகளையும் வரலாற்றுப் பின்னடைவுகளையும் சந்தித்துத் தொண்டர்களின் பலத்தால் மீண்டு வந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய அவர், எத்தனை விஜய் வந்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கியையோ அல்லது அதன் அடித்தளத்தையோ அசைக்க முடியாது எனக் கூறினார். “நாங்கள் தேர்தல் களத்தில் பின்னடைவைச் சந்தித்திருக்கலாமே தவிர இறந்துவிடவில்லை; வாழ்க்கை ஒரு வட்டம், மேலே இருப்பது கீழே வரும், கீழே இருப்பது மேலே போகும்” என இயற்கை நியதியைக் குறிப்பிட்டு அவர் பேசினார்.
மந்திரத்தில் மாங்காய் பறிப்பது போல குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துவிட முடியாது என விஜய்யைச் சாடிய ஆர்.பி. உதயகுமார், வெறும் சமூக வலைத்தள ரீல்ஸ்களும், கூவிக்கூவி அழைக்கும் கூட்டணிகளும் உண்மையான மக்கள் சேவையாகாது எனக் காட்டமாகக் குறிப்பிட்டார். தவெக மற்றும் அதன் தலைவர்களை இலக்கு வைத்து அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ள இந்த அதிரடி பேச்சு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.