Posted in

உங்க கால்ல கூட விழுகிறேன் மேடம், எங்களைக் காப்பாத்துங்க!  ஆட்சியர் காலில் விழுந்து விவசாயி கதறல்..

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில், நிலத்தடி நீர் பற்றாக்குறை மற்றும் கல்குவாரிகளின் அத்துமீறல்களால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிட்டதாகக் கூறி, விவசாயி ஒருவர் பெண் ஆட்சியரின் காலில் விழுந்து கண்ணீர் மல்கக் கதறிய சம்பவம் ஒட்டுமொத்த கூட்ட அரங்கிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாக நதியில் உடனடியாகத் தடுப்பணை கட்டி 24 பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட ஏரிகளை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த அதிரடிப் போராட்டம் வெடித்துள்ளது.

வேலூர் மாவட்டம் கனிமவள ஒன்றியப் பகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயசாமி என்பவர், மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் முன்னிலையில் தனது குமுறல்களை அடுக்கடுக்காக வெளிப்படுத்தினார். “எங்கள் பகுதியில் சுமார் 10 முதல் 12 எரிகளுக்கு மேல் உள்ளன. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் இந்த ஏரிகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. நாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்குக் குடிக்கக் கூடத் தண்ணீர் இல்லாததால், அவற்றை இறைச்சிக் கூடங்களுக்கு (கசாப்புக் கடை) ஓட்டிச் செல்ல வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

விவசாயிகளின் இந்தத் துயர நிலைக்குத் தங்களின் கிராமப் பகுதியில் விதிகளை மீறி மிக ஆழமாகத் தோண்டப்பட்டு இயங்கி வரும் 12-க்கும் மேற்பட்ட தனியார் கல்குவாரிகளே முக்கியக் காரணம் என்று ஜெயசாமி குற்றம் சாட்டினார். “விவசாயக் கிணறுகள் 30 முதல் 40 அடியும், போர்வெல்கள் 300 அடியும் மட்டுமே எங்களால் அமைக்க முடிகிறது; அரசு விதிகளின்படி நாங்கள் 3 ஹெச்பி (HP) மோட்டாரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், இந்த வணிக ரீதியான கல்குவாரிகள் பூமிக்கு அடியில் நூற்றுக்கணக்கான அடிகள் ஆழத்திற்குச் சென்று 20 முதல் 25 ஹெச்பி வரையிலான ராட்சத மோட்டார்களைப் பயன்படுத்தி நிலத்தடி நீரை ஒட்டுமொத்தமாக உறிஞ்சி விடுகின்றனர். இதனால் ஒட்டுமொத்த பூமியும் வறண்டு, விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது” என்று அவர் முறையிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், நாக நதியின் உபரி நீரை கால்வாய்கள் மூலம் கொண்டு வந்து தங்களின் 24 பஞ்சாயத்து ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்றும், பலவீனமாக உள்ள ஏரிக்கரைகளைப் பலப்படுத்தி முள் புதர்களை அகற்ற வேண்டும் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் கூட்டத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சாடினார். தவெக ஆட்சிக் காலத்தில் தற்பொழுது கடுமையான கோடை வெப்ப அலை வீசக்கூடும் என அரசு எச்சரித்து வரும் சூழலில், கல்குவாரிகளுக்கு உடனடியாகச் சீல் வைக்கக் கோரி அதிகாரிகளின் காலில் விழுந்து விவசாயி நியாயம் கேட்ட இந்தக் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி அரசு நிர்வாகத்தின் மீதான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *